குர்ஆனுடன் தொடர்பு வைப்போம் !
இறைவன் இந்த உலகத்தை படைத்து இந்த உலகத்திலே சிறந்த படைப்பாக மனித சமுதாயத்தை உருவாக்கினான். இவ்வுலக வாழ்க்கைக்கு பிறகு மறுமைநாளில் வெற்றி பெறுவதற்காக அந்த இறைவனுக்கு விருப்பமான வழிகாட்டுதல், வாழ்கை முறை என்ன என்பதை அவனுடைய திருமறை குர்ஆன் மூலமும் அவன் தூதர் மூலமும் விளக்கியுள்ளான்.
يَاأَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், அருளும் வந்து விட்டன.
திருக்குஆன் 10:57
உங்களுடைய உள்ளங்களில் இருக்கக் கூடிய ஷிர்க்கையும் உங்களுடைய உள்ளங்களில் இருக்கக் கூடிய தவறான எண்ணங்கள் அனைத்தையும் போக்கும் நிவாரணியாக இந்த குர்ஆன் இருக்கிறது.
யாரிடம் இஸ்லாத்திற்கு முரணான கொள்கைகள் உள்ளனவோ அவர் இந்த குர்ஆனை படித்தால்,அதனுடன் தொடர்பு வைத்தால், அதில் உள்ள சட்டங்களை விளங்கினால் அவர்களுடைய உள்ளங்களில் இருக்கக் கூடிய தவறான எண்ணங்களும் தவறான கொள்கைகளும் அழிந்து விடும்.
முஸ்லிம்கள் இந்த குர்ஆனோடு எப்படி தொடர்பு வைத்திருக்கிறார்கள்? ஏதோ ஒரு மந்திர சொல்லைப் போன்று தான் இந்த குர்ஆனை பார்க்கிறார்கள். யாரேனும் மரணித்தார்கள் என்றால் மற்ற சமுதாயம் எவ்வாறு திதி, திவஷம் என்று ஒன்றாவது, மூன்றாவது, ஏழாவது நாள்களில் சில சடங்குகளை செய்கிறார்களோ அவ்வாறு இந்த திருக்குர்ஆனையும் பயன்படுத்தி வருகின்றனர். யாரவது இறந்தால்தான் திருக்குர்ஆனின் நினைப்பே இந்த சமுதாயத்திற்கு வருகிறது.