மஹ்ஷரில் மனிதனின் நிலை தொடர் 3🌔🌊

போதனையை புறக்கணித்தவர்களின் நிலை[மஹ்ஷரில் மனிதனின் நிலை தொடர் 3🌔🌊
ஒவ்வொரு முஸ்லிமும், தம்மிடம் மார்க்கம் சம்பந்தமாக ஒரு செய்தி சொல்லப்படும் போது அந்தச் செய்தி சரியா? தவறா? என்று ஆராய்ந்து பார்க்கும் பழக்கம் கொண்டவராகத் திகழ வேண்டும்.
பெரும்பாலான முஸ்லிம்கள் இவ்வாறு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம்; இந்த இரண்டுக்கு உட்பட்டே நமது அமல்கள் இருக்க வேண்டும் என்று மார்க்கச் செய்திகளை நாம் எடுத்துரைக்கும் போது காது கொடுத்துக் கேட்கவே மறுக்கும் மக்களைப் பார்க்கிறோம். அவர்கள் செய்து வரும் பித்அத்கள், அனாச்சாரங்களுக்கு எதிராக எடுத்துக் காட்டப்படும் மார்க்க ஆதாரங்களை ஏறெடுத்துப் பார்க்கவே தயங்குவதைப் பார்க்கிறோம்.

தாங்கள் செய்து கொண்டும் பிறருக்குப் போதித்துக் கொண்டும் இருக்கின்ற காரியங்கள் தவறானவை என்று தெரிந்த பிறகும் அத்தவறுகளை ஒப்புக் கொண்டு திருந்துவதற்கு முன்வராத பிடிவாதக்காரர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு, அல்லாஹ்வும் அவனது தூதரும் போதித்திருக்கும் செய்திகளை பொடும்போக்குத்தனமாகப் புறந்தள்ளும் மக்கள் மறுமையில் செவிடர்களாக குருடர்களாக ஊமைகளாக நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு இறைமறையில் ஏக இறைவன் எச்சரிக்கிறான்.


அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு அவனன்றி வேறு பாதுகாவலர்களை நீர் காணமாட்டீர். அவர்களை முகம் கவிழச் செய்து குருடர்களாக, ஊமைகளாக, செவிடர்களாக கியாமத்நாளில் எழுப்புவோம். அவர்களின் தங்குமிடம் நரகம். அது தணியும் போதெல்லாம் தீயை அதிகமாக்குவோம். நமது வசனங்களை அவர்கள் மறுத்ததாலும், “நாங்கள் எலும்பாகி மக்கிப்போகும் போது புதுப்படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவோமா?” என்று கூறியதாலும் இதுவே அவர்களுக்குரிய தண்டனை.
(அல்குர்ஆன் 17:97, 98)

எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத்நாளில் குருடனாக எழுப்புவோம். “என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?” என்று அவன் கேட்பான். “அப்படித்தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தவாறே இன்று மறக்கப்படுகிறாய்” என்று (இறைவன்) கூறுவான்.
அல்குர்ஆன் (20:124-126)

கொலையாளிகளின் நிலை
தினமும் செய்தித் தாள்களில் கொலை பற்றிய நிகழ்வுகள் இடம் பிடித்துக் கொண்டே இருக்கின்றன. காசு, போட்டி, பொறாமை, கள்ளத்தனம் என்று பல்வேறு காரணங்களுக்காகக் கொலைகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. கொலையெனும் பாதகச் செயலில் பங்கெடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். பல சம்பவங்களில் கொலையாளி யாரென்றே தெரிவதில்லை. இதற்காகப் பிடிபடும் சிலரும் பெயரளவுக்கு மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். கொல்லப்பட்டவருடைய குடும்பத்தினருக்கும் போதிய உரிமை, நியாயம் கிடைப்பதில்லை.
ஆனால், மறுமை நாளில் கொலையாளிகள் தப்பிக்க இயலாது. கொல்லப்பட்டவருக்குச் சரியான நியாயம் வழங்கப்படும். கொலையாளிகள் இனம் காட்டப்படுவார்கள். எல்லா மக்களுக்கும் முன்னிலையில் கொலையாளிகள் தங்களால் கொல்லப்பட்டவர்கள் மூலம் மறுமை நாளில் முடியைப் பிடித்து இழுத்துவரப்படுவார்கள்.
(இந்த உலகத்தில்) கொல்லப்பட்டவர் மறுமை நாளில் தம்மைக் கொலை செய்தவனை அவனது முடியைப் பிடித்து இரத்தம் வடியும் நிலையில் இழுத்து வருவார். அவனை அல்லாஹ்வின் அர்ஷின் கீழே போட்டு, “என் இறைவா! இவன் தான் என்னைக் கொலை செய்தவன்’ என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: திர்மிதீ (2955)

நீதம் செலுத்தாதவர்களின் நிலை
ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தவர்களில் பலர் தங்களது மனைவிமார்களிடத்தில் நீதமாக நடக்காமல் இருக்கிறார்கள். ஒரு மனைவியின் பக்கம் மட்டும் சாய்ந்து விட்டு, மற்ற மனைவிக்கும் அவள் மூலம் பெற்றெடுத்த குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் சரியாகக் கவனிக்காமல் ஓர வஞ்சனையாக நடந்து கொள்கிறார்கள்.
மறுமையில் இந்த நீதமற்றவர்கள் தங்களது நிலையை வெளிச்சம் போடும் விதத்தில் ஒரு தோள் புஜம் சாய்ந்தவர்களாக நடந்து வருவார்கள். இவர்கள் பூமியில் இருக்கும் போது நல்ல தோற்றத்துடன் கம்பீரமாக நடைபோட்டிருக்கலாம். ஆனால் மறுமை நாளில் மக்கள் மத்தியில் கேவலப்படும் விதத்தில் இவ்வாறு ஒரு பக்கம் சாய்ந்து சப்பாணிகளாக வருவார்கள். இதையறிந்த பிறகாவது இத்தகையவர்கள் தங்களைத் திருத்திக் கொள்வார்களா?

“எவருக்கு இரு மனைவிகள் இருந்து (இருவரில்) ஒருவரை விட மற்றொருவரின் பக்கம் சார்பாக (ஒரு தலைப்பட்சமாக) செயல்படுகிறாரோ அவர் மறுமை நாளில் தமது இரு தோள் புஜங்களில் ஒன்று சாய்ந்தவராக வருவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: நஸாயீ (3881)

ஜகாத் கொடுக்காதவர்களின் நிலை
மார்க்கம் கூறும் கடமைகளுள் முக்கியமான ஒன்று ஜகாத் ஆகும். முஸ்லிம்களாக இருப்பவர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்கும்பட்சத்தில் தங்களது செல்வத்தில் இருந்து சிறு பகுதியை பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். இந்தப் பொதுநலத்தைப் போதிக்கும் ஒப்பற்ற திட்டமே ஜகாத். ஆனால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் பெரும் பொடும்போக்காக இருக்கிறார்கள்.

ஜகாத் எனும் கடமையை மனம் போன போக்கில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு ஜகாத் விஷயத்தில் கடமையை புறக்கணித்தவர்கள், தூதரின் போதனைக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் மறுமையில் மோசமான நிலையில் இருப்பார்கள். இத்தகையவர்களை மஹ்ஷரிலேயே அல்லாஹ் அடையாளம் காட்டுவான்.
எதற்கெல்லாம் இவர்கள் ஜகாத் கொடுக்கவில்லையோ அவற்றை சுமந்து கொண்டிருப்பார்கள். ஜகாத் கொடுக்கப்படாத செல்வங்களால் சூடுபோடப்படுவார்கள். முறையாக ஜகாத் கொடுக்கப்படாத செல்வம் உருமாற்றப்பட்டு அதனால் வேதனைப் செய்யப்படுவார்கள். இதை முஃமினாக செல்வந்தர்கள் கவனத்தில் கொள்வார்களா? தங்களை மாற்றிக் கொள்வார்களா?

உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்ற வில்லையாயின் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அது போலவே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லை என்றால் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து தனது குளம்புகளால் அவனை மிதித்துத் தனது கொம்புகளால் அவனை முட்டும்.
மேலும் உங்களில் யாரும் கியாமத் நாளில் கத்திக் கொண்டிருக்கும் ஆட்டைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, (அபயம் தேடிய வண்ணம்) முஹம்மதே என்று கூற, நான் “அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை” என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன். மேலும் யாரும் (கியாமத் நாளில்) குரலெழுப்பிக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, முஹம்மதே என்று கூற, நான் “அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை” என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1402)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எனது உயிர் எவன் கையிலுள்ளதோ’ அல்லது “எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ’ அவன் மீது ஆணையாக! ஒருவனுக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து அவற்றிற்கான ஸகாத்தை அவன் நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெரிதாகவும் கொழுத்ததாகவும் வந்து அவனைக் (கால்) குளம்புகளால் மிதித்துக் கொம்புகளால் முட்டும். அவற்றில் கடைசிப் பிராணி அவனைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவன் மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்படும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: புகாரி (1403, 4659, 1403, 1460)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்கு காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும்
.
மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக்கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை – அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக்கொண்டு, “நான் தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்’ என்று சொல்லும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பிறகு, “அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர், “அது தங்களுக்கு நல்லது’ என்று எண்ண வேண்டாம்.
மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்” எனும் (3:180ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1403), திர்மிதீ (2938)

உங்களது கருவூலம் மறுமைநாüல் கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறிவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (4659)

“பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (1803)

மறுமையில் வெற்றிபெறும் விதத்தில் நமது பயணத்தை அமைத்துக் கொள்ளும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!

எம். முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி. மங்கலம்

கருத்துகள்